சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ

தீ விபத்து ஏற்பட்டு, மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை தீ மளமளவென பரவியது.
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
Published on

பீஜிங்,

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் கிறிஸ்து பிறப்புக்கு பின்னர் 536-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. இந்த கோவிலின் துணை கட்டிடம் ஒன்று பக்கத்தில் அமைந்துள்ளது.

அந்த கட்டிடத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்வதுண்டு. 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலின் துணை கட்டிடங்களில் ஒன்றாக இந்த கோவில் வேறொரு பழமையான கட்டிடத்தின் பிரதிபலிப்பாக கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், அப்படி வந்த சுற்றுலாவாசிகளில் ஒருவர் மெழுகுவர்த்தியையும், நறுமணம் தரும் பத்தியையும் ஏற்றும்போது தவறாக கையாண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை தீ மளமளவென பரவியது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், கட்டிடத்தின் கூரையின் துண்டுகள் தீப்பிடித்து எரிந்தபடியே விழுகின்றன. இதனால், வான் வரை அடர்த்தியான கரும் புகை எழுந்தது. அந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது.

எனினும் இதனால், உயிரிழப்புகள் எதுவும் இல்லை. சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்கு தீ பரவவில்லை. இதனால், கோவிலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2009-ம் ஆண்டு அக்டோபரில் கட்டப்பட்ட இந்த துணை கட்டிடத்தில், எந்த கலாசார நினைவு சின்னங்களும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com