நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்: ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அரசு தப்பி விட்டதுடன், எல்லா வகையிலும் அது முன்பை விட வலுவடைந்து உள்ளது என்று மெத்வதேவ் கூறியுள்ளார்.
மாஸ்கோ,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதற்காக அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி எச்சரித்து உள்ளார்.
இந்நிலையில், ரஷியாவின் முன்னாள் ஜனாதிபதியான டிமிட்ரி மெத்வதேவ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் செயலால், இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆட்பட்டு உள்ளது. அந்நாட்டின் பல நகரங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும், அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அரசு தப்பி விட்டது. எல்லா வகையிலும் அது முன்பை விட வலுவடைந்து உள்ளது என்றே கூறலாம்.
அந்நாட்டின் மத தலைவரிடம் இருந்து, இதற்கு முன்பு வேறுபட்டோ அல்லது எதிர்ப்பு தெரிவித்தோ இருந்தவர்கள் கூட தற்போது, ஆன்மீக தலைமையை தேடி ஓடும் நிலை காணப்படுகிறது. அமெரிக்காவை டிரம்ப், மற்றொரு போரில் தள்ளியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை உலகம் முழுவதும் உள்ள பெருமளவிலான நாடுகள் எதிர்க்கின்றன.
இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் என்று கூறி உங்களுக்கு வாழ்த்துகள் என்றும் கிண்டலாக அவர் தெரிவித்து உள்ளார்.






