உக்ரைன் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை நடத்திய ரஷியா - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஐரோப்பிய கவுன்சில் 9 ஆயிரம் கோடி யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி உள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசும்போது, உக்ரைனுக்கு எதிராக கடந்த வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை ரஷியா நடத்தியுள்ளது என கூறியுள்ளார். இதன்படி, 1,300 டிரோன் தாக்குதல்களும், 1,200 வான்வழி குண்டுகளையும், 9 ஏவுகணைகளையும் வீசி ரஷியா தாக்கியுள்ளது என கூறியுள்ளார்.
இதுபற்றி குறிப்பிட்ட அவர், பல்வேறு நாடுகளும் உதவி அளித்து வருகின்றன. ஐரோப்பிய கவுன்சில் 9 ஆயிரம் கோடி யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது. நார்வே மற்றும் ஜப்பான் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. போர்ச்சுகல் நாட்டுடன் கடல்சார் டிரோன் ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது என்று கூறினார்.






