ஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் - பிரதமர் மோடி உறுதி


ஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் - பிரதமர் மோடி உறுதி
x
தினத்தந்தி 2 April 2024 9:20 AM GMT (Updated: 2 April 2024 10:14 AM GMT)

எனது 3-வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராஞ்சி,

உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாககருதப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. வாக்குஎண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்தநிலையில், உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் நடைபெற்ற பா.ஜ.க பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் உத்தரகாண்டில் அதிக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். அவர்களால் என்னை தடுக்க முடியாது.

ஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன். மோடியின் உத்தரவாதம் என்பது உத்தரவாதத்தை நிறைவேற்றுவதாகும் என்றார். மேலும் எண்ணங்கள் சரியாக இருக்கும் போது வளர்ச்சி தானாக உருவாகும். நல்ல எண்ணங்கள் நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியினர் போராட்டம் நடத்திய நிலையில், பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story