ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டி


ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டி
x
தினத்தந்தி 27 March 2024 10:13 AM GMT (Updated: 27 March 2024 11:11 AM GMT)

ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம்,

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், பன்னீர்செல்வம் என்ற பெயரில் நேற்று ஒரே நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் இதுபோன்று செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த எம்.பன்னீர் செல்வம் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.


Next Story