பா.ஜ.க. தனித்து 350 இடங்களை கைப்பற்றும்: தமிழகத்தில் 5 இடங்களில் வெல்லும் - பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கருத்து


பா.ஜ.க. தனித்து 350 இடங்களை கைப்பற்றும்: தமிழகத்தில் 5 இடங்களில் வெல்லும் - பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கருத்து
x

பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார்.

புதுடெல்லி,

பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா எழுதிய, 'ஹவ் வீ வோட்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக, 'செபாலஜிஸ்ட்' எனப்படும், மக்கள் ஓட்டளிக்கும் முறை குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில், அவர் தனியார் டி.வி.ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை விட, இந்த முறை பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறலாம். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பா.ஜ.க. தனித்து 330 முதல் 350 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜனதா கட்சிக்கு பிரதமர் தலைமையில் பிரசாரம் நடைபெறுவதால், கடந்த 2019-ம் ஆண்டைவிட 5 முதல் 7 சதவீத தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும் எனத்தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் வெற்றி பெறலாம். கடந்த 2014-ம் தேர்தலில் வென்றதைவிட 2 சதவீதம் குறைவாகவே இருக்கும். எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பிரச்சினை தலைமைதான். தேர்தலில் வெற்றி பெற 2 விஷயங்கள் முக்கியம். முதலில் பொருளாதாரம் அடுத்து தலைமை.

இந்த இரண்டும் பா.ஜ.க.,வுக்கு சாதகமாக உள்ளது. பிரதமர் மோடியைவிட பாதியளவாவது மக்களை கவரும்வகையிலான தலைவரை எதிர்க்கட்சி கூட்டணி தேர்வு செய்திருந்தால், அதை போட்டியாக கருதலாம்.

தமிழகத்தில் பா.ஜ.க. 5 இடங்களில் வெற்றி பெறும். கூடுதலாக வென்றாலும் ஆச்சர்யம் இல்லை. கேரளாவில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி கிடைக்கலாம். இதற்கு காரணம் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம். மக்களின் வாழ்க்கையில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில்தான் இந்திய மக்கள் வாக்களிக்கின்றனர். பணவீக்கம் அதிகரித்துள்ளது, வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது என எதிர்க்கட்சிகள் எப்போதும் கூறும். இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டைவிட வேலைவாய்ப் பின்மை குறைவாகவே உள்ளது.

இவ்வாறு சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story