விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்


விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
x

விழுப்புரம், கடலூர் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்கின்றனர்.

இதற்காக விழுப்புரம் வி.சாலை பகுதியில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story