பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ராவத்


பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ராவத்
x

மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ராவத் பாஜகவில் இணைந்தார்.

போபால்,

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நிவாஸ் ராவத் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று அம்மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவருடன், காங்கிரசை சேர்ந்த மொரேனா மாவட்ட மேயர் ஷர்தா சோலங்கியும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மந்திரியாகவும் இருந்துள்ள ராம்நிவாஸ் ராவத் கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மத்திய பிரதேசத்தின் மொரேனா தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க.வின் நரேந்திர சிங் தோமரிடம் தோல்வியடைந்தார்.

1990, 1993, 2003, 2008, 2013-ல் மத்திய பிரதேச மாநிலத்தின் விஜய்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

1998-ம் ஆண்டு பா.ஜனதாவின் பாபுலால் மெவ்ராவை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2018-ல் பா.ஜனதா வேட்பாளர் சீதாராமை எதிர்த்து போட்டியிட்டு 2840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் நரேந்திர சிங் தோமரை எதிர்த்து போட்டியிட்டார். 1,13,341 வாக்குகள் வித்தியாசத்தில் மொரேனா தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.

இந்தமுறை மக்களவை தேர்தலில் மொரேனா தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று நம்பிய ராவத்துக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி சத்யபால் சிங் சிகர்வாருக்கு வாய்ப்பு வழங்கியது. அதில் ஏமாற்றமடைந்த ராவத், இன்று ராகுல் காந்தி அந்த பகுதியில் பரப்புரைக்கு வந்தபோது தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.


Next Story