முதல்-அமைச்சர் வருகை எதிரொலி: திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை


முதல்-அமைச்சர் வருகை எதிரொலி: திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை
x
தினத்தந்தி 21 March 2024 11:17 AM GMT (Updated: 21 March 2024 12:20 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை திருச்சி வருகிறார்

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது .வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தமிழகத்தில் இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை திருச்சி வருகிறார். திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். பின்பு அவர் காரில் தஞ்சை வழியாக திருவாரூர் செல்கிறார்.பின்னர் 23-ந்தேதி அவர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்னை செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு அவர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


Next Story