தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்


தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்
x
தினத்தந்தி 23 March 2024 2:53 PM GMT (Updated: 23 March 2024 2:54 PM GMT)

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. இதனிடையே சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. 'கரும்பு விவசாயி' சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். கிருஷ்ணிகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது;-

"என் மக்கள் என் சின்னத்தை தேடமாட்டார்கள், என் எண்ணத்தைத்தான் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். பணம் இல்லையென்றாலும் கவலை இல்லை. என் மக்களுக்கு தன்னலம் இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதுமானது. நாங்கள் வெறும் பதவிக்கானவர்கள் அல்ல, மக்களின் உதவிக்கானவர்கள். நாங்கள் பணத்திற்கானவர்கள் அல்ல, பெருமைமிக்க தமிழன் என்ற இனத்திற்கானவர்கள்.

நாங்கள் அரசியல் செய்ய வந்தது பிழைப்பதற்காக அல்ல, மக்களுக்கு உழைப்பதற்காக. நாங்கள் களத்தில் நிற்பது கேடு கெட்ட பணநாயகத்தை ஒழித்து, மாண்புமிக்க ஜனநாயகத்தை காப்பதற்காக. சின்னம் வைத்திருக்கும் கட்சிகளை விட, சின்னம் எதுவென்றே தெரியாத கட்சி துடிப்போடு களத்தில் நிற்கிறோம். நாங்கள் அழிவின் விளிம்பில் நிற்கும் ஒரு தேசிய இனம். எங்கள் இனத்தைக் காப்பதற்காக எவரும் ஒப்பிட முடியாத அளவிற்கு வேகத்துடன் போராடுவோம்."

இவ்வாறு சீமான் பேசினார்.




Next Story