பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி - தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு


பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி - தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு
x

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. அதன்படி காங்கிரசுக்கு உதம்பூர், ஜம்மு மற்றும் லடாக் ஆகிய தொகுதிகளும், தேசிய மாநாட்டு கட்சிக்கு அனந்த்நாக், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய தொகுதிகளும் உறுதியானது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேசிய மாநாட்டு கட்சி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீநகரில் ஷியா தலைவர் அகா ரூஹுல்லாவும், பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லாவும் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். மேலும் அனந்த்நாக் தொகுதியில் குஜ்ஜார் தலைவர் மியான் அல்தாப் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சி முன்னரே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story