வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி


வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
x
தினத்தந்தி 3 April 2024 8:10 AM GMT (Updated: 3 April 2024 12:25 PM GMT)

கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

வயநாடு,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜக. உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. நாளை (ஏப்ரல் 4) மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். தொண்டர்களுடன் வாகன பேரணியாக சென்ற, ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story