பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - மம்தா பானர்ஜி


பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் - மம்தா பானர்ஜி
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 11 April 2024 11:41 PM GMT (Updated: 12 April 2024 6:44 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா,

தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 'இந்தியா' கூட்டணி கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கொல்கத்தாவில் சிவப்பு சாலையில் கூட்டம் நடந்தது. அதில் அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், "குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த சட்டங்களை மேற்கு வங்காளத்தில் வலுக்கட்டாயமாக அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன்.

மக்களை எப்படி வெறுக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது. நான் வெறுப்பு பேச்சுகள் பேசுவது இல்லை. எல்லோரும் சகோதரர்கள் போல் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அமைதியாகவும், இணக்கமாகவும் வாழ வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவது திரிணாமுல் காங்கிரஸ் மட்டும்தான். 'இந்தியா' கூட்டணி பற்றி அப்புறம் முடிவு செய்யலாம். மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை, ஒரு ஓட்டு கூட வேறு கட்சிக்கு செல்லக்கூடாது. தேர்தல் நேரத்தில், மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி வருகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். ஒரு சிறையை கட்டி, அனைவரையும் அதில் தள்ளுங்கள். ஆனால், 130 கோடி மக்களையும் சிறையில் அடைக்க முடியுமா?

நாட்டுக்காக ரத்தம் சிந்த தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த சித்ரவதை தொடர அனுமதிக்க மாட்டேன்" என்று அவர் கூறினார்.


Next Story