ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

இந்தியா 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது.
தோஹா,
வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை டி20 போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் ஜிதேஷ் சர்மா தலைமையில் களமிறங்கியுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நேற்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 13.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.






