ஐ.பி.எல்.2026: 2 தமிழக வீரர்களை தேர்வுக்கு அழைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்..?

image courtesy:PTI
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் அணியை வலுப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
சென்னை,
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதன் காரணமாக அடுத்த சீசனுக்கு முன் அணியை வலுப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக உள்ளூர் சிறப்பாக செயல்படும் திறமை வாய்ந்த இளம் வீரர்களை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக கடந்த ஐ.பி.எல். தொடரில் ஆயுஷ் மாத்ரே, பிரெவிஸ் போன்ற சில இளம் வீரர்களை அணியில் சேர்த்தது.
அந்த வரிசையில் சிஎஸ்கே நிர்வாகம் தற்போது 2 தமிழக வீரர்களை அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு தேர்வு செய்யும் வகையில் சோதனைக்கு அழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆர்.எஸ். அம்ப்ரிஷ் மற்றும் இசக்கி முத்து ஆகியோரை சோதனைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களில் ஆல் ரவுண்டரான ஆர்.எஸ். அம்ப்ரிஷ் இந்திய 19-வயதுக்குட்பட்டோர் அணியில் ஆயுஷ் மாத்ரே தலைமையில் சிறப்பாக விளையாடினார். மறுபுறம் வேகப்பந்து வீச்சாளரான இசக்கி முத்து அண்மையில் முடிவடைந்த டி.என்.பி.எல். தொடரில் சிறப்பாக செயல்பட்டு திருப்பூர் தமிழன்ஸ் அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் காரணமாக இவர்கள் இருவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தேர்வுக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.






