

துபாய்,
19 வயதுக்கு உட்பட்டோருக்கான (ஜூனியர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் 49.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் சதாத் 52 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் சேத்மிகா செனவிரத்ன மற்றும் டல்னித் சிகேரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. மிடில் ஆர்டரில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் சாமிக ஹீனடிகல (51 ரன்கள்) பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.
49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் அடித்த இலங்கை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விரான் சாமுதிதா 62 ரன்கள் அடித்தார்.
இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம் - நேபாளம் அணிகள் மோதின. இதில் வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.