டெஸ்டில் இருந்து ஓய்வு: பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் சரிவை சந்திக்கும் விராட், ரோகித்..?

விராட் மற்றும் ரோகித் தற்போது ஏ+ கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் இருவரும் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பி.சி.சி.ஐ.-ன் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் சரிவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் முன்னணி வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏ+ கிரேடில் ரூ.7 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் அவர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள். இதனால் அவர்களின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக இருவரும் ரூ. 5 கோடி சம்பளம் உள்ள ஏ அல்லது ரூ.3 கோடி சம்பளம் உள்ள பி கிரேடுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஏ+ கிரேடில் ரோகித் மற்றும் விராட் கோலி உடன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






