இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட் போட்டியை நேரில் காண சென்ற ரோகித் சர்மா... புகைப்படங்கள் வைரல்

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன.
பின்னர் 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 88 ஓவர்களில் 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 118 ரன்களும், ஆகாஷ் தீப் 66 ரன்களும், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் அடித்துள்ளது. பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜாக் கிராவ்லி 14 ரன்னில் முகமது சிராஜ் பந்து வீச்சில் போல்டானார். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே நேற்றைய ஆட்டத்தை (3-வது) நேரில் காண இந்திய டெஸ்ட் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஒருநாள் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா ஓவல் மைதானத்திற்கு சென்றார். அங்கிருந்து இந்திய அணியினரை உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






