மகளிர் உலகக்கோப்பை: இலங்கை-நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதியில் ரத்து

மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் பாதியில் ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 15வது லீக் ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி குணரத்ன மற்றும் சாமரி அத்தபத்து களம் கண்டனர்.
இதில் விஷ்மி குணரத்ன 42 ரன்னிலும், சாமரி அத்தபத்து 53 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஹாசினி பெரேரா மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஹர்ஷிதா சமரவிக்ரம 26 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இலங்கை அணி 50 ஒவரில் 6 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 55 ரன் எடுத்தார்.
இதனை தொடர்ந்து 259 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்யவிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமான மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாம மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் பாதியில் ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.






