டெல்லியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி.. அதிரும் அருண் ஜெட்லி மைதானம்


டெல்லியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி.. அதிரும் அருண் ஜெட்லி மைதானம்
x

மெஸ்சியின் இந்திய பயணம் டெல்லியுடன் நிறைவு பெறுகிறது.

புதுடெல்லி,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்சி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்சி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார். அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்சி அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.

இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. ரசிகர்களில் பெரும்பாலானோர் அர்ஜென்டினா அணியின் சீருடையையும், அவர் முன்பு ஆடிய கிளப்பான பார்சிலோனா அணிக்குரிய சீருடையையும் அணிந்திருந்தனர். அவர் மைதானத்திற்குள் நுழைந்ததும், மெஸ்சி.... மெஸ்சி என மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். காட்சி போட்டியை பெனால்டி ஷாட் அடித்து தொடங்கி வைத்த மெஸ்சி பிறகு ரசிகர்களை நோக்கி கால்பந்தை உதைத்தும் உற்சாகப்படுத்தினார்.

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர். மெஸ்சிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக தெண்டுல்கர் வழங்கினார். ‘கால்பந்தில் எல்லா சாதனைகளையும் மெஸ்சி நிகழ்த்தியுள்ளார். அவரது அர்ப்பணிப்பு, மனஉறுதி, ஈடுபாடு மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்’ என தெண்டுல்கர் புகழாரம் சூட்டினார். இங்கு மெஸ்சி ஒரு மணி நேரம் செலவிட்டார்.

இதனையடுத்து மெஸ்சி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெஸ்சி அருண் ஜெட்லி மைதானத்திற்கு சென்றடைந்துள்ளார். ரசிகர் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அருண் ஜெட்லி மைதானத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மெஸ்சி.. மெஸ்சி.. என்ற ரசிகர்களின் கோஷத்தால் அருண் ஜெட்லி மைதானம் அதிர்கிறது.

அங்கு அவர் ரசிகர்களை நோக்கி கால்பந்துகளை வீசினார். அவரது இந்திய பயணம் டெல்லியுடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story