பூசணிக்காய் ‘பேசியல்’


பூசணிக்காய் ‘பேசியல்’
x
தினத்தந்தி 29 Nov 2021 5:30 AM GMT (Updated: 27 Nov 2021 10:45 AM GMT)

பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும்.

ரும பராமரிப்புக்கு இயற்கையானப் பொருட்களை பயன்படுத்தும்போது, அழகுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும். அந்த வகையில் பூசணிக்காயைக் கொண்டு செய்யும் ‘பேசியல்’ குறித்து பார்க்கலாம்.

பூசணியில் உள்ள என்சைம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் போன்றவை, இறந்த செல்களை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை, சுருக்கங்கள் வராமல் தடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.
பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...

சரும நிறத்தை அதிகப்படுத்துவதற்கு…
தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்கவும். பின்னர் சிறிதளவு பூசணிக் கலவையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து, பருத்தித் துணியை வெந்நீரில் நனைத்து பூசணிக் கலவையைத் துடைத்து எடுக்கவும். சில வினாடிகள் கழித்து, மீண்டும் மீதம் உள்ள பூசணிக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் மூலம் முகம் மற்றும் கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மிளிரும்.

மிருதுவான சருமத்திற்கு...
தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, தயிர் - 1 தேக்கரண்டி, ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்த பாதாம் - 2 தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு, ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் தயிர், அரைத்த பாதாம், தேன் ஆகிய மூன்றையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.


பொலிவான சருமத்திற்கு...
தோல் நீக்கி மசித்தப் பூசணி - 2 தேக்கரண்டி, ஜாதிக்காய் தூள் - ½  தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, பசுவின் பால் (காய்ச்சாதது) - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் மசித்த பூசணி, ஜாதிக்காய் தூள், பாதாம் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். அதில் தேவையான அளவு பால் சேர்த்து, பசை பதத்திற்கு வரும் வரை கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.

Next Story