மணல் அள்ள தடை கோரி வழக்கு: திருச்சி கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


மணல் அள்ள தடை கோரி வழக்கு: திருச்சி கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 26 July 2017 10:00 PM GMT (Updated: 26 July 2017 8:02 PM GMT)

தடுப்பணை பகுதியில் மணல் அள்ள தடை கோரி வழக்கு திருச்சி கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

மதுரை,

திருச்சி மாவட்டம் தொட்டியம் சீலைபிள்ளையார்புதூரை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வடிவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்தப்பகுதியில் பொக்லைன் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது.

ஆற்றின் குறுக்கே தடுப்பணை இருந்தால், அங்கிருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மணல் அள்ளக்கூடாது என்பது விதி. ஆனால் சட்டத்தை மீறி மணல் அள்ளி வருகின்றனர். இந்த மணலை தடுப்பணை பாலம் வழியாக இரவு, பகலாக லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். இதனால் தடுப்பணையும், ஆறும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்பணை பகுதியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், இந்த மனு குறித்து திருச்சி கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 2–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story