இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்து இருந்த 980 கிலோ களைக்கொல்லி பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்து இருந்த 980 கிலோ களைக்கொல்லி பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Nov 2018 10:15 PM GMT (Updated: 21 Nov 2018 8:41 PM GMT)

தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்து இருந்த 980 கிலோ களைக்கொல்லி மருந்தை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏதேனும் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று தூத்துக்குடி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே உள்ள தெற்கு கல்மேடு கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு களைக்கொல்லி மருந்து கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ் தலைமையிலான அதிகாரிகள் தெற்கு கல்மேடு கடற்கரையில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு முட்புதர்களுக்கு இடையே 40 மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த மூடைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் களைக்கொல்லி மருந்து பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் மொத்தம் 980 கிலோ களைக்கொல்லி மருந்துகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் களைக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த மருந்துகளை பதுக்கி வைத்தவர்கள் யார், என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story