பேட்ட, விஸ்வாசம் படங்களை ஆய்வு செய்ய செல்லாததால் அதிருப்தி: மதுரை மாநகராட்சி அலுவலர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பேட்ட, விஸ்வாசம் படங்களை ஆய்வு செய்ய செல்லாததால் அதிருப்தி: மதுரை மாநகராட்சி அலுவலர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Jan 2019 10:30 PM GMT (Updated: 21 Jan 2019 10:17 PM GMT)

பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தாக எழுந்த புகார் குறித்து தியேட்டர்களுக்கு ஆய்வு செய்ய செல்லாத மதுரை மாநகராட்சி அலுவலர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரபாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகார் குறித்து ஆய்வு செய்ய வக்கீல்கள், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் என தியேட்டருக்கு 3 பேர் வீதம் நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் கடந்த 18–ந்தேதி வக்கீல்கள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்தபோது, மாநகராட்சி அதிகாரிகள் 2 பேர் ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற ஒத்துழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அவர்களை ஆஜராகுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அம்பிகா, முகாம்பிகை தியேட்டர்களுக்கு மாநகராட்சி தரப்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மாநகராட்சி வருவாய் உதவியாளர்கள் ஆசைத்தம்பி, சுப்பிரமணி ஆகிய 2 பேரும் செல்லாதது தெரியவந்தது. அவர்கள் இருவரும் நேரில் ஆஜரானார்கள்.

பின்னர் அவர்களை பணியிடை நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் குறித்து 21 வக்கீல் கமி‌ஷனர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அறிக்கை தர வேண்டும் என்றும், மதுரை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 17–ந்தேதி வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான தியேட்டர்களின் வசூல் அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் கேளிக்கை வரி அலுவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். முடிவில் விசாரணையை வருகிற 24–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story