கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 1 May 2021 5:06 AM GMT (Updated: 1 May 2021 5:06 AM GMT)

காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் கடந்த 13-ந்தேதி துரையரசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக துரையரசன் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் சித்தேரிமேடு கிராமத்தினர் காஞ்சீபுரம் கோட்ட காவல் துணை போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

துரையரசன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் சித்தேரிமேடு வாலிபர்களை இரவு நேரத்தில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணை என்ற பெயரில் வரச்சொல்லி துன்புறுத்துகின்றனர். இதனால் அவர்கள் அன்றாட பிழைப்புக்காக கூலிவேலைக்கு சென்று பிழைப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

அண்மையில் துரையரசன் மகன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களையும், அவரது வீட்டில் குடியிருந்து வரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களையும் விசாரித்தால் உண்மை தெரிய வரலாம். எனவே சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யுமாறும் தேவையில்லாமல் கிராமத்தில் வசித்து வரும் வாலிபர்களை துன்புறுத்தாமல் இருக்க அறிவுரை வழங்குங்கள்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story