இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யும் விவகாரம்


இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யும் விவகாரம்
x
தினத்தந்தி 11 Aug 2017 11:15 PM GMT (Updated: 11 Aug 2017 9:05 PM GMT)

இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் வாங்கவோ, விற்கவோ தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ தடை விதித்து (கால்நடை சந்தை ஒழுங்குமுறை விதிகள்) கடந்த மே மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த எஸ்.செல்வகோமதி மற்றும் பி.ஆஷிக் இலாஹி பாவா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மேலும் மத்திய அரசின் கால்நடை சந்தை ஒழுங்குமுறை விதிகளை ரத்து செய்யக்கோரி ஐதராபாத்தை சேர்ந்த அப்துல் பகீம் குரேஷி உள்ளிட்ட சிலரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ, விற்கவோ தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை விதித்து உள்ள தடை தொடரும் என்றும் இந்த தடை நாடு முழுவதும் பரவலாக அமலில் இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, ‘மத்திய அரசின் அறிவிக்கையில் உள்ள கால்நடை சந்தை பிரிவுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், விலங்குகளை கொடுமைப்படுத்துவதை கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் மத்திய அரசு சந்தையில் நுழைவதை அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன், மாடு, எருமை ஆகியவற்றை இந்த அறிவிக்கையில் சேர்த்த மத்திய அரசு, கோழிகளை சேர்க்காததன் உள்நோக்கம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்யும் அறிவிக்கைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.


Next Story