இந்தியா-சீனா எல்லை பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 9,400 வீரர்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியா-சீனா எல்லை பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 9,400 வீரர்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x

இந்தியா-சீன எல்லை பாதுகாப்புக்கு கூடுதலாக 7 பட்டாலியன்களை பணியில் அமர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்கு கூடுதல் படைகளை ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சீனாவை ஒட்டிய எல்லையை பாதுகாத்து வரும் இந்தோ - திபெத்தியன் எல்லை போலீஸ் படை (ITBP) பிரிவில் கூடுதலாக 7 பட்டாலியன்களை சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம், கூடுதலாக 9,400 வீரர்கள் இந்த பிரிவில் இணைவார்கள் என்றும், இந்தியா-சீனா எல்லையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள 47 எல்லை நிலைகளிலும், 12 முகாம்களிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்பட்டதை அடுத்து, இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் படை சுமார் 90 ஆயிரம் வீரர்களைக் கொண்டதாக பலப்படுத்தப்பட்டது. தற்போது இவர்கள் 3,488 கி.மீ. தொலைவு கொண்ட எல்லையை பாதுகாத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story