தேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை - சரத்பவார் எச்சரிக்கை


தேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை - சரத்பவார் எச்சரிக்கை
x

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க யாராவது வியூகம் வகுத்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

16 எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக வதந்திகள் பரவின. இதை உறுதி படுத்தும் விதமாக பா.ஜனதாவுக்கு ஆதரவாக அவர் பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "சாம்னா"வில், "தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாராவது தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவில் இணைந்தாலும், ஒரு கட்சியாக தேசியவாத காங்கிரஸ் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காது" என சரத்பவார் கூறியதாக தெரிவித்திருந்தார்.

100 சதவீதம் விருப்பம்

இந்தநிலையில் தன்னை சுற்றி உலவும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், "தான் உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன்" என்று தெரிவித்து இருந்தார்.

அத்துடன் தனக்கு முதல்-மந்திரியாக 100 சதவீதம் விருப்பம் இருப்பதாகவும், 2024-ம் ஆண்டு மாநில சட்டசபை தேர்தல் வரை காத்திருக்க தேவையில்லை, தற்போது கூட முதல்-மந்திரி பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி உரிமை கோரலாம் என கூறி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார், "நாளை யாராவது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயன்றால், அது அவர்களது வியூகம். ஆனால் கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இன்று இதை பற்றி பேசுவது முறையற்றது. ஏனென்றால் நாங்கள் இந்த பிரச்சினையை பற்றி விவாதிக்கவில்லை" என்றார்.


Next Story