மசோதாவுக்கு கவர்னர் விரைவான ஒப்புதல் அளிக்க சட்டசபையில் தீர்மானம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் பாராட்டு


மசோதாவுக்கு கவர்னர் விரைவான ஒப்புதல் அளிக்க சட்டசபையில் தீர்மானம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் பாராட்டு
x

மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம்

நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், சட்டசபைகளில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர்கள் கிடப்பில் போடுவது தொடர்கதையாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சி நடைபெறுகிற தமிழ்நாட்டிலும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை. குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டது பல தரப்பிலும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இதையடுத்து மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் வழங்க மாநில கவர்னர்களுக்கு மத்திய அரசும், ஜனாதிபதியும் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 10-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

முதல்-மந்திரிகளுக்கு கடிதம்

இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில் அவர், சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநில சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

கெஜ்ரிவால் பாராட்டு

இந்த தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

மாநில அரசுகளுக்கும், அவற்றின் கவர்னர்கள் அல்லது துணை நிலை கவர்னர்களுக்கும் இடையேயான இடைமுகம், மத்திய அரசால் நடத்தப்படுகிற மவுன யுத்தத்தின் போர்க்களமாக மாறி உள்ளது.

கவர்னர்களும், துணைநிலை கவர்னர்களும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை வேண்டுமென்றே பலவீனப்படுத்துவதுடன், தங்கள் விருப்பத்துக்கு நிர்வாகத்தை தடுக்கின்றனர்.

இத்தகைய போக்குக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் அளிப்பதற்கு மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டசபைக்கு பாராட்டுக்கள்.

இதே போன்றதொரு தீர்மானம், டெல்லி சட்டசபையிலும் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story