அசாம்: ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்


அசாம்: ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
x

மணிப்பூரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் இன்று சிறப்பு அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கவுகாத்தியைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.

இதுபற்றி சிறப்பு அதிரடிப் படை டிஐஜி பார்த்தசாரதி மஹந்தா கூறியதாவது,

மணிப்பூரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடத்தல்காரர்கள் கவுகாத்தியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சாங்சாரியை நோக்கி தப்பிக்க முயன்றதாக தகவல் வந்தது. வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் நிறுத்தாமல் சென்றனர். இதனால் அதிரடி படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் அவர்கள் வந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 1.8 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story