பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி.. சாலை அமைப்பே சரியில்லை என மக்கள் குற்றச்சாட்டு


பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி..  சாலை அமைப்பே சரியில்லை என மக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 April 2024 5:46 AM GMT (Updated: 7 April 2024 6:04 AM GMT)

பேருந்து விபத்தில் காயமடைந்த 30 பேர் ஹோலாலகரே தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சித்ரதுர்கா:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோகர்ணா நகரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இன்று காலையில் ஹோலாலகரே நகரின் அருகே வந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. ஹோலாலகரே நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஹோலாலகரே தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், மோசமான சாலை அமைப்பே இதற்கு காரணம் என்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Next Story