டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்


டெல்லியில் நாளை கூடுகிறது  காவிரி மேலாண்மை ஆணையம்
x

காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது.

புதுடெல்லி,

காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 88-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நடைபெற்றது.இதில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் (மொத்தம் 20.75 டி.எம்.சி.) தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். கர்நாடகத்தின் 4 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து, கடந்த 10-ந் தேதி நிலவரப்படி 51 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவித்த அவர்கள், கர்நாடக அணைகளை உத்தரவாதத்துடன் நம்பியிருக்க முடியாது என்று கூறினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள், வருகிற 16-ந் தேதி காலை 8 மணி முதல் 31-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என முடிவு செய்து அதனை கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரைத்தனர். இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Next Story