காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை


காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை
x

சட்டசபை தேர்தலில் கோலார்-சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்ததாக முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கூறினார்.

கோலார் தங்கவயல்:

சட்டசபை தேர்தலில் கோலார்-சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்ததாக முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

கோலார் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அத்துடன் 6 சட்டசபை தொகுதிகளிலும் யாரை வேட்பாளர்களாக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும் பேசப்பட்டது.

கட்சி மேலிடத்திற்கு...

கூட்டத்திற்கு பின் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள 12 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பிடும்படியாக வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிக்கெட் கேட்டு ஒவ்வொரு தொகுதியிலும் பலர் விண்ணப்பித்துள்ளார்கள்.

குறிப்பாக கோலார்-சிக்பள்ளாப்பூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 4 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களின் பெயர் கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story