நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி 3-வது முறையாக ஆஜர்...!


நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி 3-வது முறையாக ஆஜர்...!
x

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி 3-வது முறையாக ஆஜராகியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்டு வந்த 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன்மூலம் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை 'யங் இந்தியா' அபகரித்துள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு போட்டு அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி, அதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணைக்காக சோனியா காந்திக்கு 2 முறை சம்மன் அனுப்பியும், கொரோனா பாதிப்பால் அமலாக்கத்துறை முன்பாக அவரால் ஆஜராக முடியவில்லை.

தொற்றில் இருந்து மீண்ட நிலையில், கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் சோனியா காந்தி முதல் முறையாக ஆஜரானார். அன்று அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் 28 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனை தொடர்ந்து சோனியா காந்தியிடம் நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த விசாரணை நீடித்த இந்த விசாரணை மாலை 7 மணி அளவில் நிறைவடைந்தது.

இந்த விசாரணையின்போது, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனத்தினை 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியதில் சோனியாவின் பங்களிப்பு என்ன?, கம்பெனி நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகள் என்ன?, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பதிவு செய்தனர். இதையடுத்து, சோனியா காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கூறியது.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் 3-வது முறையாக அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story