மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் - ராகுல் காந்தி நம்பிக்கை


மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் - ராகுல் காந்தி நம்பிக்கை
x

கோப்புப்படம்

5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவற்றில் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வருவதால் இந்த 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வெற்றி நிச்சயம்

டெல்லியில் நடைபெற்ற அசாம் மாநிலத்தின் பிரபல செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது ராகுல் காந்தி இதனை தெரிவித்தார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

தற்போதைய நிலவரப்படி தெலுங்கானாவில் நாங்கள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ராஜஸ்தானில் நெருக்கமான போட்டி இருக்கும். வெற்றி பெற முடியும் என நினைக்கிறோம். அதே சமயம் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் எங்கள் வெற்றி நிச்சயம். சூழல் அப்படிதான் இருக்கிறது.

கவனத்தை சிதறடிப்பதன் மூலம் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுகிறது என்ற மிக முக்கியமான பாடத்தை கர்நாடகாவில் காங்கிரஸ் கற்றுக்கொண்டது.

திசைதிருப்பும் முயற்சி

பா.ஜ.க. எம்.பி.க்கள் ரமேஷ் பிதுரி, நிஷிகாந்த் துபே ஆகியோரின் செயல்பாடுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற எண்ணத்திலிருந்து திசைதிருப்புவதற்கான முயற்சிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களின் அடிப்படை விஷயம் என்பது அவர்களுக்கு (பா.ஜ.க.) தெரியும்.

நாங்கள் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை கையில் எடுக்கும் நேரத்தில், அவர்கள் நம்மை திசை திருப்ப இந்த வகையான யுத்திகளை பயன்படுத்துகிறார்கள். அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை இப்போது நாங்கள் கற்றுக்கொண்டோம்.

ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்

எதிர்கட்சிகளால் அனுசரித்துச் செல்ல முடியாது என்று நினைக்காதீர்கள், நாங்கள் அனுசரித்துச் செல்கிறோம், ஒருங்கிணைந்து செயல்படுகிறோம், இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் இருக்கிறோம். நாங்கள் 2024 பொதுத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிப்போம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


Next Story