மேற்கு வங்காளத்தில் கூட்டணி அமையாததற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான் காரணம்.. டெரிக் ஓ பிரையன் குற்றச்சாட்டு


மேற்கு வங்காளத்தில் கூட்டணி அமையாததற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான் காரணம்.. டெரிக் ஓ பிரையன் குற்றச்சாட்டு
x

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பிராந்திய கள நிலவரங்களுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த களப்பணிகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஆனால் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்தார். இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடும் முடிவு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் கூட்டணி அமையாததற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான் காரணம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை கணிசமான இடங்களில் தோற்கடித்தால், அதன்பின்னர் கூட்டணியில் அங்கம் வகிப்போம். அரசியல் சாசனத்திற்காக போராடும் கூட்டணியின் அங்கமாக நாங்கள் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story