மதுபான கொள்கை வழக்கு: தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள் கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜர்


மதுபான கொள்கை வழக்கு: தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள் கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜர்
x

தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள் கே.கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

டெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர், அவர் ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றகாவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு கோர்ட்டு அனுமதியளித்தது. மேலும், சிசோடியாவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கில் சிசோடியாவை அமலாக்கத்துறை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மேலவை உறுப்பினரான கே. கவிதா மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், கே.கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, நேற்று டெல்லி ஜந்தர்மந்தரில் கே.கவிதா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் கவிதா நடத்திய அந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆம் ஆத்மி, சிவசேனா, திரிணாமுல் காங்கரஸ், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story