ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன்


ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன்
x
தினத்தந்தி 1 Feb 2024 11:30 AM GMT (Updated: 1 Feb 2024 11:54 AM GMT)

அமலாக்கத்துறையினரின் 7 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் நேற்று கைது செய்யப்பட்டார்.

ராஞ்சி,

ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இருந்தார். இவர் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது.

மேலும் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை ஹேமந்த் சோரன் நிராகரித்தார். அதன்பிறகு கடந்த மாதம் 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் ராஞ்சியில் வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் 30 மணிநேரம் மாயமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பி.எம்.டபிள்யூ உள்பட 2 கார், ஆவணங்கள் மற்றும் ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மீண்டும் நேற்று ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 7 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரான தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதையடுத்து புதிய முதல்-மந்திர்யாக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. முன்னதாக 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறைக்கு ஹேமந்த் சோரன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான ஹேமந்த சோரனின் ரிட் மனுவை சுப்ரீம்கோர்ட்டு நாளை விசாரிக்க உள்ளது.


Next Story