கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை


கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:45 PM GMT)

கத்தி முனையில் செல்போன் பறித்த வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். பின்னர், வீட்டிற்கு செல்வதற்காக வாடகை கார் ஒன்றை பதிவு செய்துவிட்டு ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர், சிவக்குமாரிடம், நண்பர் ஒருவருடன் அவசரமாக பேசுவதற்கு செல்போன் தருமாறு கூறி உள்ளார். ஆனால் சிவக்குமார் செல்போனை கொடுக்கவில்லை.

இதையடுத்து அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, சிவக்குமாரிடம் இருந்த தங்கச்சங்கிலி, வைர மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அசோக்நகர் போலீசார் விவேக்நகரை சேர்ந்த தீன் என்பவரை கைது செய்தனர். அவர் மீது குற்றப்பத்திரிக்கையும், பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதி முகமது முசீருல்லா அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது தீர்ப்பு கூறிய நீதிபதி, தீன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


Next Story