காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்


காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்
x

காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக பயிர்கள் கருகி வருகின்றன. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டுக்கு உரிய நீரை காவிரியில் திறந்துவிட பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்தியதா? என்பது குறித்து செப்டம்பர் 1-ந்தேதிக்குள் (இன்றைக்குள்) அறிக்கை அளிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கடந்த 26-ந்தேதி உத்தரவிட்டனர்.

இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆணைய உறுப்பினர் வினீத் குப்தா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு குறிப்பிட்ட காலத்தில் மொத்தம் 13.32 டிஎம்.சி. நீர் திறந்துவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி வீதம் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.கிருஷ்ணமூர்த்தி, மூத்த வக்கீல் ஜி.உமாபதி, வக்கீல் டி.குமணன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆகஸ்டு 29-ந்தேதி முதல் செப்டம்பர் 12-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் சராசரியாக வினாடிக்கு நாள்தோறும் 7,200 கன அடி நீர் அதாவது 9.341 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. ஆனால் அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீரை நாள்தோறும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 28-ந்தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஆகஸ்டு 27-ந்தேதி வரை பிலிகுண்டுலுவில் திறந்துவிட்டிருக்க வேண்டிய நீரில் 8.988 டி.எம்.சி. அளவுக்கு குறைந்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறைந்த நீரை விடுவிப்பது குறித்த ஏற்பாடுகளை காவிரி நீர் ஒழுங்காற்று குழு மேற்கொள்ளவில்லை என்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கவனத்துக்கு தமிழ்நாடு அரசு எடுத்துச்சென்றது.

இவ்வாறு குறைந்த நீரை ஈடு செய்வதற்கும், விடுவிப்பதற்கும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவால் கண்டறியப்பட்ட ஆகஸ்டு 29-ந்தேதி முதல் செப்டம்பர் 12-ந்தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 7,200 கன அடி நீரை திறந்துவிடுவதையும் எவ்வித உத்தரவுகளையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கவில்லை.

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதை உறுதி செய்ய கடமையில் இருந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தவறியுள்ளது. ஆகஸ்டு 11-ந்தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆகஸ்டு 12-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் திறக்க வேண்டிய வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை 10 ஆயிரம் கன அடியாக தன்னிச்சையாக குறைத்தது.

ஆகஸ்டு 29-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீரை நாள்தோறும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது. பற்றாக்குறை நீரான 8.988 டி.எம்.சி. நீர் தொடர்பாக தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்ட பிறகும், அது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது.

ஆகஸ்டு 23-ந்தேதி நிலவரப்படி, மேட்டூர் அணை நீரை சார்ந்திருக்கும் குறுவை, சம்பா பயிர் பாசன பகுதிகளின் அளவு 5.60 லட்சம் ஏக்கர்களாகும். ஆனால், 14.93 லட்சம் ஏக்கர்கள் வரை குறுவை, சம்பா பயிர் பாசன பகுதியை தீர்ப்பாயம் அனுமதித்து அதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

இதன்படி 37.5 சதவீத பகுதியில் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது. மீதமுள்ள பகுதிகளில் பயிரிட வேண்டியுள்ளது. ஆகஸ்டு 23-ந்தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் 21.625 டி.எம்.சி. நீர் இருந்தது. அதில் 11.625 டி.எம்.சி. நீர் மட்டுமே பாசனத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதால், 5.60 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு நீர் தேவையாகிறது. எனவே உரிய நீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு அவசரமாக உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது.

ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 28-ந்தேதி வரையிலான காலத்துக்கான பற்றாக்குறையாக உள்ள 8.98 டி.எம்.சி. நீரை குறிப்பிட்ட விகிதத்திற்கு ஏற்க எதிர்காலத்தில் திறப்பது குறித்து உரிய உத்தரவுகளை கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய (வெள்ளிக்கிழமை) வழக்குகளின் பட்டியலில் இடம்பெறவில்லை.

எனவே காவிரி வழக்கு இன்று விசாரணைக்கு வராது.


Next Story