பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருக்கு துணைநிற்பது என் கடமை - ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்கும் மெகபூபா


பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருக்கு துணைநிற்பது என் கடமை - ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்கும் மெகபூபா
x

ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீநகர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல தரப்பினரும் இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் இணைந்துள்ளனர்.

இதனிடையே, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 109-வது நாளான கடந்த 24-ம் தேதி டெல்லியை எட்டியது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி உரையாற்றினார். அதன் பின்னர், கிறிஸ்துமஸ் - புத்தாண்டையொட்டி யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளைக்கு பின் ஜனவரி 3-ம் தேதி யாத்திரை மீண்டும் டெல்லியில் இருந்து தொடங்குகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீரை சென்றடையும்போது அந்த யாத்திரையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியும் பங்கேற்க உள்ளார்.

இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல்காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்க எனக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் அடங்காத துணிச்சலுக்கு வணங்குகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக துணிச்சலாக சவால் விடுபவருக்கு துணை நிற்பது என் கடமை என்று நான் நினைக்கிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய ராகுல்காந்தியின் பயணத்தில் நான் இணைய உள்ளேன்' என்றார்.


Next Story