மோர்பி பால விபத்து பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை - ஆம் ஆத்மி விமர்சனம்


மோர்பி பால விபத்து பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை - ஆம் ஆத்மி விமர்சனம்
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 1 Nov 2022 10:37 AM GMT (Updated: 1 Nov 2022 10:42 AM GMT)

மோர்பி பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்து அல்ல ஊழல் நிறைந்த பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை என ஆம் ஆத்மி விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த தொங்கு பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.

இதனிடையே, சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.30) மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது பாரம் தாங்காமல் திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது. இதில், பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த அனைவரும் மச்சு ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த கோர விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மோர்பி பால விபத்து பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை என்று ஆம் ஆத்மி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா கூறுகையில், மோர்பி பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்து அல்ல. ஊழல் நிறைந்த பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை' என்றார்.

முன்னதாக, மோர்பி பால விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிக்சிசை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். இதற்காக, காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை அவசர அவசரமாக புணரமைக்கப்பட்டும் வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story