புதிதாக பரவும் 'ஜேஎன்.1' வகை கொரோனா: ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு


புதிதாக பரவும் ஜேஎன்.1 வகை கொரோனா: ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 Jan 2024 10:49 AM GMT (Updated: 5 Jan 2024 10:56 AM GMT)

கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு 'ஜேஎன்.1' கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

புதிய வகையான 'ஜேஎன்.1' கொரோனா தொற்று, நாடு முழுவதும் பரவி வருகிறது. தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வரை இரட்டை இலக்கங்களில் இருந்தது, ஆனால் குளிர் காலநிலை மற்றும் புதிய வகை கொரோனா மாறுபாட்டிற்கு பிறகு பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு 'ஜேஎன்.1' கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,249, கர்நாடகாவில் 1,240 , மராட்டியத்தில் 914, தமிழ்நாட்டில் 190, சத்தீஷ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலா 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,423 இருந்து 4,334 ஆக குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் ஐந்து பேர் கேரளாவிலும், நான்கு பேர் கர்நாடகாவிலும், இரண்டு பேர் மராட்டியத்திலும், ஒருவர் உத்தரபிரதேசத்திலும் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடிக்கு மேல் உள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story