மக்களவையில் அநாகரீகமாக பேசிய பா.ஜ.க. எம்.பி. மீது கடும் நடவடிக்கை: சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


மக்களவையில் அநாகரீகமாக பேசிய பா.ஜ.க. எம்.பி. மீது கடும் நடவடிக்கை: சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
x

அநாகரீகமாக பேசிய பா.ஜ.க. எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகரை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி அநாகரீகமாக சில வார்த்தைகள் பேசினார். இது தொடர்பாக கட்சித் தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுமாறு அவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார்.

'இந்தியா' கூட்டணி வலியுறுத்தல்

ஆனால் அந்த வார்த்தைகளை ஏற்கனவே அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டதாக அவையை நடத்திய காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்தார். சபாநாயகர் ஓம் பிர்லாவும் ரமேஷ் பிதூரியை எச்சரித்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் மக்களவை உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

சபாநாயகருக்கு கடிதம்

மராட்டிய மாநில முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான நசீம் கான், மக்களவையில் இருந்து பிதூரி நிரந்தரமாக நீக்ககப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாரத ராஷ்டிர சமிதி தெலுங்கானா மேல்சபை உறுப்பினர் கே.கவிதா, சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, முஸ்லிம் அமைப்பான ஜமாத் உலமா-இ-ஹிந்த் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் ரமேஷ் பிதூரி மீது சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. குற்றச்சாட்டு

ஆனால் பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அதில், பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி, பிரதமர் மோடிக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறியுள்ளார். அதனால்தான் ரமேஷ் பிதூரி நிதானமிழந்து அவ்வாறு பேசிவிட்டார். எனவே டேனிஷ் அலி பேசியது குறித்தும் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story