மத்திய மந்திரி பசுபதி பராசின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


மத்திய மந்திரி பசுபதி பராசின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 20 March 2024 7:49 AM GMT (Updated: 20 March 2024 8:04 AM GMT)

புவி அறிவியல் துறை மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் துறையை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது.

2020-ல் ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரது சகோதர் பசுபதி பராசுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, பசுபதி பராஸ் மற்றும் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இதனைத் தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராசும், லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஜ் பஸ்வானும் தொடங்கினர். இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் சிராஜுடன் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.க அறிவித்ததை தொடர்ந்து, மத்திய மந்திரி பதவியில் இருந்து பசுபதி பராஸ் நேற்று விலகினார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், பசுபதி பராசின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகை இன்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து புவி அறிவியல் துறை மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு உணவு பதப்படுத்தும் தொழில் துறையை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.


Next Story