அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் நோயாளி பலாத்காரம்; தொழிலாளி கைது


அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் நோயாளி பலாத்காரம்; தொழிலாளி கைது
x

கலபுரகியில் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் நோயாளியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கலபுரகி:

கலபுரகியில் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் நோயாளியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

உடல் நலக்குறைவு

கலபுரகி டவுன் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதி அடைந்து வந்தார். இதற்காக அவர் டவுன் பகுதியில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 7 மாதங்களாக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த பெண் கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்தார். அவர் பெண் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்குள் நுழைந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த அந்த பெண் நோயாளியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் கத்தி கூச்சலிட்டார். அப்போது அங்கு இருந்த வாலிபர் ஒருவர் மர்மநபரை சுற்றிவளைத்து பிடித்தார்.

வழக்குப்பதிவு

பின்னர், அவரை ஆஸ்பத்திரி ஊழியரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து உடனடியாக பிரம்மபுரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மர்மநபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது பெயர் மெகபூப் பாஷா என்பது தெரிந்தது. கூலி தொழிலாளியான அவர் தான் இரவு நேரத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ததும் தெரியந்தது. இதுகுறித்து பிரம்மபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story