வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ.50 லட்சம் நகை-பணம் கொள்ளை


வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ.50 லட்சம் நகை-பணம் கொள்ளை
x

சீனிவாசப்பூர் தாலுகாவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:

சீனிவாசப்பூர் தாலுகாவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மர்ம நபர்கள்

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா சீகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி பாய். இவர் நேற்று வீட்டில் இருந்தார். குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் மர்ம நபர்கள் ஜானகி பாயின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் ஜானகிபாயை தாக்கி தரதரவென இழுத்துச்சென்று ஒரு அறையில் கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்து அடைத்து வைத்தனர்.

பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

குடும்பத்தினர் பதற்றம்

இதற்கிடையே வெளியில் சென்றிருந்த ஜானகி பாயின் குடும்பத்தினர் வீடு திரும்பினர்.அப்போது ஒரு அறையில் ஜானகி பாய், கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணியை திணித்து அடைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜானகி பாயை மீட்டு விசாரித்தனர். அப்போது ஜானகி பாய் அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.

அதைக்கேட்ட அவரது குடும்பத்தினர் பதற்றத்தில் உறைந்து போயினர். பின்னர் அவர்கள் இதுகுறித்து சீனிவாசப்பூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அவர்கள் ஜானகி வீட்டை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் தடயங்களையும் சேகரித்தனர். பின்னர் அவற்றை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து போலீசார் தடயங்களை, ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story