ஆதாரை ஆயுதமாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - காங்கிரஸ் கட்சி சாடல்


ஆதாரை ஆயுதமாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - காங்கிரஸ் கட்சி சாடல்
x

கோப்புப்படம்

தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துவதுவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளா்களுக்கு, ஆதாா் அடிப்படையிலான பணப் பரிவா்த்தனையில் ஊதியம் வழங்கும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 14.33 கோடி பேர் செயல்முறை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர். கடந்த டிசம்பர் 27-ந் தேதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில் 34.8 சதவீத (8.9 கோடி) தொழிலாளர்கள் மற்றும் 12.7 சதவீதம் (1.8 கோடி) செயல்முறை தொழிலாளர்கள் ஆதார் அடிப்படையிலான சம்பள திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

இந்த திட்டத்தில் ஆதாரை அடிப்படையாக கொண்ட அமைப்பை பயன்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக தொழிலாளர்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியபோதும், மோடி அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.

உண்மையில், ஆதாரை அடிப்படையாக கொண்ட சம்பள அமைப்பு மற்றும் பிற தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் பல துறை சார்நத வல்லுனர்களின் கவலைகளுக்கு மோடி அரசு செவிமடுக்கவில்லை. கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை அடிப்படை வருமானம் ஈட்டுவதில் இருந்து விலக்கி வைக்கும் பிரதமரின் கொடூரமான புத்தாண்டு பரிசு இது.

100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது. ஏழைகளின் நலனை பாழ்படுத்தும் வகையிலான இத்தகைய தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். குறிப்பாக மிகவும் பின்தங்கிய இந்தியர்களின் சமூக நலன்களை மறுக்க ஆதாரை ஆயுதமாக்குவதை நிறுத்த வேண்டும்" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story