காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பனி அடர்ந்த மலைப்பிரதேசம் வழியாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு செல்கிறது. அங்கு அடிக்கடி பனிச்சரிவு நிகழ்ந்து வருகிறது.

இதில் ராணுவ வீரர்கள் அவ்வப்போது சிக்குவது உண்டு. அந்தவகையில் நேற்று அங்கு நடந்த பனிச்சரிவு ஒன்று 3 ராணுவ வீரர்களின் உயிரை பலி கொண்டிருக்கிறது.

அதாவது, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே உள்ள குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மாச்சில் செக்டாரில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர்.

இதில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பனிச்சரிவு குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த 3 வீரர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் விவரம் குறித்து உடனடியாக தகவல் இல்லை.

இந்த சம்பவம் குறித்து குப்வாரா மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாச்சில் செக்டாரில் பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள், ஒரு துரதிர்ஷ்டவசமான பனிச்சரிவில் சிக்கி உயிர்த்தியாகம் ெசய்து உள்ளனர்' என தெரிவித்தார்.

பனிச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் காஷ்மீர் எல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story