சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? வெளியானது கருத்து கணிப்பு..!


சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? வெளியானது கருத்து கணிப்பு..!
x

சத்தீஷ்காரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம்.

ராய்ப்பூர்,

மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து கடந்த 2000 -ஆம் ஆண்டு சத்தீஷ்கார் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இங்கு முதல் மாநில சட்டசபை தேர்தல் 2003-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் 2008 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் தொடர்ந்தது.

அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 - இடங்களில் வென்றது. ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 39 இடங்களில் தான் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 2003 முதல் 2013 வரை நடந்த 3 சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று சத்தீஷ்கார் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.

ஆனால் 2018-ல் தான் அப்படியே அடியோடு மாறியது. இந்த முறை பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்தது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஷ்காரில் ஆட்சி அமைத்தது. பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 7 இடங்களில் தான் வெற்றி பெற்றன. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றபோதும், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. சத்தீஷ்கார், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.

சத்தீஷ்காரை பொறுத்தவரை மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் ஆகும். இதனால், தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. அதாவது, நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 74 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின. சத்தீஷ்காரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம்.

ஐந்து மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி சத்தீஷ்கார் மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை ஏபிபி நியூஸ் - சி வோட்டர் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சத்தீஷ்கரில் பாஜக - காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே கடுமையான போட்டி நிலவும் என தெரிவித்துள்ளது.

ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 36-48 தொகுதிகள் வெற்றி பெறும். காங்கிரஸ் 41-53 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே: பாஜக 36-40. காங்கிரஸ் 40-50

இந்தியா டிவி: பாஜக 30-40, காங்கிரஸ் 46-56

ஆஜ் தக்: பாஜக 36-46, காங்கிரஸ் 40-50

ஜன் டிவி பாஜக: 34-45 காங்கிரஸ் 42-53

இதையடுத்து, சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சி முன்னிலைப் பிடித்துள்ளது என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.


Next Story